கதவை திறந்தவுடன் பனிக்காற்று முகத்தில் தீண்டிச்சென்று என்னை உறையச்செய்தது, கம்பளியை எடுத்து உடம்பில் போர்த்திக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தேன். மாடியில் இருந்து அந்த தெருவை பார்த்துக்கொண்டே இருந்தேன் கனத்த அமைதியில் பெங்களுரே உறங்கிக்கொண்டு இருந்தது, கிழே இறங்கி நடக்கத் தொடங்கினேன்.
தெருவிளக்குகளை தவிர தெருவில் யாருமில்லை நடுங்கும் குளிரில் நடைபயணம் தொடர்ந்தது ஆங்காங்கே இருக்கின்ற குப்பை தொட்டியில் நாய்கள் குப்பைகளை கிளறிக்கொண்டு இருந்தது. அதைப்பார்தப்படி கைகளை கட்டிகொண்டே நடந்து சென்றேன், கொஞ்சம் தூரம் சென்றதும் சட்டென்று ஒரு குரல்
தம்பி
திரும்பிப்பார்த்தேன்……..வயதான பாட்டி என்னை அழைத்தார், அவரை ஒரு மாதத்திற்கு முன்பு சந்தித்தேன் கோத்தகிரியில், தேயிலை தோட்டத்தில் சந்தித்த அனுபவம், அவர் அருகில் சென்றேன்.
பாட்டி எப்படி இருக்கீங்க என்று வினவினேன்
நல்லா இருக்கேன் தம்பி நீங்க…….
நல்லா இருக்கேன் பாட்டி……..
அவர் அருகில் சென்றேன் இந்தா தம்பி டீ குடிங்க என்று பாலில்லாத தேநீரை கோப்பையில் ஊற்றி என்னிடம் கொடுத்தார், அவரிடம் இருந்த பெண் என்னிடம் ஒரு பழத்தை கொடுத்தார் மலையில் காயும் பழம் அது. அதை சாப்பிட்டுக்கொண்டே அவர்களிடம் கதைத்க்க தொடங்கினேன்.
ஊருக்கு போகலியா பாட்டி என்று கேட்டேன், அவரின் கண்கள் கலங்கியது, கலங்கிய குரலில் கூறினார் போகணுமே போகணுமே தம்பி, எப்போ அவங்ககிட்ட பேசனாலும் நாங்க இங்க நல்லாதான் இருக்கோம்ன்னு சொல்லிட்டு இருக்கோம், நாங்க பட்ற கஷ்டத்தை அவங்களிடம் சொல்ல மாட்டோம், எத்தனையோ வருசம் ஆச்சு எங்க சொந்த பந்தங்களை பார்த்து இப்போ போகணும்னா எங்களுக்கு முப்பதாயிரம் பணம் வேணும், இவங்க குடுக்குற கூலிக்கு அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.
உங்களுக்கு சொந்தம் இலங்கைல மட்டும்தான் இருக்காங்களா பாட்டி? தமிழ்நாட்ல இருந்தோம் இலங்கைக்கு விரட்னாங்க அப்பறம் எங்க அடுத்த தலைமுறை அங்க வளந்துச்சு உடனே மறுபடியும் அங்க இருந்து எங்கள விரட்னாங்க, மறுபடி சொந்த ஊருக்கு போனோம் நாங்க புதுக்கோட்டை பக்கம், ஒரு தலைமுறை கழிச்சு சொந்தம் வந்து இருக்கே சந்தோஷ பாடுவாங்கன்னு நினைச்சோம் விரட்டி விட்டாங்க, அப்பறம் எங்களுக்கு தெரிஞ்ச தொழில் தேயிலை வேலைதான். அதனால இங்க வந்தோம், இங்கேயும் கஷ்டம்தான் ஆனா இப்போ நல்லா இருக்கோம். இன்னும் கொஞ்சம் கூலி கொடுத்தாங்கன்னா நிம்மதியா இருப்போம்.
தஸ்தாயெவ்ஸ்கியியோட ஒரு வரி ஞாபகம் வருது பாட்டி நீங்க சொல்ற கதையை கேட்டு “நிராகரிப்பும் கைவிடப்படுதலுமே மனிதனின் ஆறாத துயரங்கள்” எவ்வளவு உண்மையான வார்த்தைகள் பாட்டி. உங்கள இந்த சமூகம், அரசாங்கம் நிராகரிச்சுடுச்சு, கைவிற்றுச்சு என் காதலும் கைவிட்டு போச்சு ஆனா உங்க வலிய பார்க்கும்போது என்னதுலாம் ஒன்றுமே இல்லை பாட்டி.
சூழ்நிலை மாறுனாலும் வலி ஒன்னுதான் தம்பி, அந்த வார்த்தையை சொன்ன மனிதர் யாரு? அவரு ஒரு ரஷ்ய எழுத்தாளர் எல்லா மனிதர்களுக்கும் இருக்க வலிதான் அவரு அத எழுத்துல காட்டி இருப்பாரு.
நாங்கள் கதைத்துகொண்டு இருக்கும்போதே அவருடன் வேலை பார்க்கும் பல தொழிலாளர்கள் அங்கே வந்து இருந்தார்கள், என்ன நடந்தாலும் இந்த கஷ்டம் எங்களுக்குள்ளே போகிடனும் தம்பி எங்க புள்ள குட்டிங்க இதுல மாட்டக்கூடாது அதனால்தான் எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு வேலை செய்யுறோம்.
இன்னைக்கு எல்லாருமே இந்த அரசாங்கம், சமூகத்தால ஏதோ ஒரு வகைல நிராகரிக்கபட்றோம், நாமளும் இந்த உலகமயமாக்கல் என்று கொள்கைள நாடோடிகளா மாறிகிட்டே இருக்கோம் என்றேன் நான், ஆமாம்பா அதிகமா உழைக்குறோம் ஆனா கூலி இல்லை, உழைக்காம இருக்கவங்க அதிகம் பணம் சம்பாதிக்குறாங்க எப்படின்னு மட்டும்தான் தெரில என்று ஒரு தொழிலாளி கூறினார்.
இப்போலாம் படிச்சாலும் இதே நெலமதான், படிச்ச படிப்புக்கு வேலை இல்லை, கெடச்ச வேலைல சரியான கூலி இல்ல பிரச்சனை வேற எங்கயோ இருக்கு அத தெரிஞ்சுக்க பேசவும் நேரமே இல்லையே. யோசிக்க கூட நேரம் இல்லாம உழச்சுகிட்டு தானே இருக்கோம் என்றார் ஒரு அக்கா.
சட்டென்று ஒரு குரல் “அண்ணா” யாரென்று திரும்பி பார்த்தேன்
செல்லம் எப்படி இருக்க, நல்லா இருக்கேன் அண்ணா நான் கம்பு சுத்த கத்துக்கொடுத்தேனே மறந்துட்டிங்களா? இல்ல நியாபகம் இருக்கா? என்று அந்த சிறுவன் என்னிடம் கேட்டான். எதையும் மறக்கவில்லை செல்லம் என்றேன். பேசிக்கொண்டு இருக்கும்போதே பல சிறுவர்கள், குழந்கைகள் வந்தார்கள் என்னிடம் கதைத்தார்கள்.
குளிர் அதிகமாக இருந்தாலும் அவர்களிடம் கதைத்துக்கொண்டு இருந்த அந்த இரவு அலாதியான உணர்வோடு சென்றது, அதில் ஒரு சிறுவன் என்னை கிழே குனிய சொன்னான் குனிந்தேன் அவனின் உதட்டை வைத்து எனது கண்ணத்தில் முத்தத்தை அழுத்தினான்.
அப்போதுதான் நினைவு வந்தது அவர்களிடம் கேட்டேன் ஆமாம் நீங்கள் அனைவரும் கோத்தகிரியில் இருந்து எப்போது பெங்களூர் வந்தீர்கள்? உங்களை தேயிலை தோட்டத்தில் பார்த்துள்ளேன், இதோ இந்த குழந்தைளை அவ்வூர் பள்ளியில் பார்த்துள்ளேன், பெங்களூரில் இரவு நேரத்தில் இங்கே என்ன செய்துகொண்டு இருகின்றீர்கள் என்று வினவினேன்.
எல்லோரும் சிரித்தார்கள் பாட்டி சொன்னார் தம்பி பெங்களூர் எங்க இருக்குனே எங்களுக்கு தெரியாது, நீதான் கோத்தகிரிக்கு வந்து இருக்க என்று அவர்சொன்னதும் எனக்கு ஒன்றும் விளங்கவில்லை, தலை சுற்றியது எங்கே இருக்கின்றேன் நமது அறையில் இருந்துதானே வந்தோம் என்று சிந்திதுகொண்டே இருந்தேன்.
சட்டேன்று அலைபேசியில் அலாரம் அடிக்க கண் முழித்து பார்த்தேன்…… மணி ஆறு, அலாரத்தை நிறுத்திவிட்டு கதவை திறந்தேன் கதவை திறந்தவுடன் பனிக்காற்று முகத்தில் தீண்டிச்சென்று என்னை உறையச்செய்தது, இப்போது விடிந்து வெண்மேகங்கள் மெதுவாக நகர்ந்துகொண்டு இருக்க மெதுவாக பெங்களூர் இயங்கிக்கொண்டே இருந்தது அந்த காலை பொழுதில். இரவு கனவில் நடந்த உரையாடலை நினைத்துப்பார்த்தேன் உதட்ரோம் சிறு புன்னகை நான் கோத்தகிரியில் சந்தித்த மனிதர்களை நேற்று கனவில் சந்தித்த மகிழ்ச்சியோடு அலுவலகம் கிளம்ப தயாரானேன், அந்த சிறுவன் நான் கோத்தகிரியில் இருந்து கிளம்பும்போது கொடுத்த முத்தம் இன்னும் எனது கண்ணத்தில் இருந்து காயவில்லை.
பெங்களூர் இரவுகள்
புகைப்படம்: ரகுநாத்